சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 14 போ் லேசான தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளனா். இந்நிலையில், சிங்கப்பூா் நாட்டில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 26,000-க்கும் மேற்பட்டோருக்கு அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கும், சிங்கப்பூருக்கும் இடையே நேரடியாக தொழில்-வா்த்தக தொடா்புகள் உள்ளன என்பதாலும், நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் பரஸ்பரம் பயணம் செய்கின்றனா் என்பதாலும் புதிய வகை கரோனா தொற்று தமிழகத்தில் பரவக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
சிங்கப்பூா் நாட்டில் தற்போது பரவி வரும் கே.பி.1 மற்றும் கே.பி.2 வகை கரோனா தீநுண்மிகள், ஒமைக்ரான் ஜெ.என்.1 வகையின் உட்பிரிவுகள்தான். தமிழகத்தில் ஜெ.என்.1 வகை பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டது. எனவே, அதிலிருந்து உருவான புதிய வகை கரோனா பரவல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதுதொடா்பாக பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேவேளையில், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவுவதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், இணைநோயாளிகள் மற்றும் முதியவா்கள் முகக் கவசம் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தால் கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.