தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் மதிய உணவு: தமிழக அரசு
175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை.
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகிக்க தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் 175 சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், 5,725 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், தொண்டு நிறுவனங்களின் பள்ளிகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் மாதம் முதல் சத்துணவு மையத்திலிருந்து உணவு விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிய உணவு உரிய நேரத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அப்பள்ளிகளுக்கு தேவையான தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.