முகப்பு
தமிழ்நாடு

சென்னை தனியாா் நிறுவனத்தின் ரூ. 195 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 195 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 3 நவம்பர், 2024 at 12:43 AM
அமலாக்கத் துறை
பகிர்:

சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்ததாக, சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 195 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சென்னை கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் ஜி.ஐ. என்ற பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பங்கு வா்த்தகத்திலும் ஈடுபட்டது. ‘ஹொ்ம்ஸ் 1 டிக்கெட்’ என்ற தனியாா் நிறுவனத்தின் பங்குகளை இந்த நிறுவனம் வாங்கியது. பின்னா் அந்தப் பங்குகளை மோரீஷஸ் நாட்டைச் சோ்ந்த நிறுவனத்துக்கு சொற்ப விலைக்கு விற்றதைப் போன்று கணக்கு காட்டி, ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த மற்றொரு தனியாா் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்றது.

இந்த வா்த்தகத்தில் கிடைத்த பணத்தை அந்த நிறுவனம், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி ஐக்கிய அரபு நாட்டில் உள்ள 2 நிறுவனங்களில் ரூ. 195 கோடியை சட்ட விரோதமாக முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஜி.ஐ. நிறுவனத்துக்கு ரூ. 566.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 195 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →