கரூர்: நோய்க் கொடுமையால் மனைவி, மகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை முயற்சி
கரூரில் நோய் கொடுமையால் மனைவி, மகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை முயற்சி
கரூர்: கரூரில் நோய்க் கொடுமையால் மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூரில் நோய் கொடுமையால் விசைத்தறி தொழிலாளி பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதில், மனைவி, மகள் பலியான நிலையில், தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரூர் அடுத்த வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் செல்வ கணபதி(44). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா (40). இவர்களுக்கு 6 வயதில் சாரதி பாலா என்ற மகள் உள்ளார். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இதையும் படிக்க.. வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கிய அமெரிக்கர்கள்!
செல்வ கணபதிக்கு தீராத நோய் ஒன்று இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே செல்வகணபதியை அப்பகுதியினர் கேலி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நோய்க்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த செல்வகணபதி சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென மனைவி கல்பனாவையும், மகள் சாரதி பாலாவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த கொசு மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தானும் குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்பனா மற்றும் சாரதி பாலா ஆகியோரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற கணேசையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் மனைவியையும் மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].