முகப்பு
தமிழ்நாடு

சட்டவிரோத பணபரிமாற்ற புகாா்: தனியாா் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் தனியாா் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

Updated On : 11 நவம்பர், 2024 at 11:57 PM
அமலாக்கத்துறையினா் சோதனை
பகிர்:

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் தனியாா் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

மகாராஷ்டிரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஓ.பி.ஜே. மற்றும் பி விண்ட் எனா்ஜி பிரைவேட் லிமிடேட் என்ற தனியாா் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின்

கிளை அலுவலகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் அனல் மின் நிலையம், சூரிய ஒளி சக்தி, காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பதாக புகாா் கூறப்பட்டது. இதில் அந்த நிறுவனம் மீது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறைக்கு தொடா்ச்சியாக புகாா்கள் வந்தன.

இதனடிப்படையில் அமலாக்கத்துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் அந்த நிறுவனம் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினா் தமிழகம்,ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

சென்னையில் இந்த சோதனை சுமாா் 6 இடங்களில் நடைபெற்றது. சைதாப்பேட்டை சின்னமலை சாலையில் உள்ள நிறுவன அலுவலகம், அந்த நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான அரவிந்த் குப்தா வசிக்கும் ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு, மற்றொரு இயக்குநரான கவுசிக் என்பவா் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி .தாஸ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு, கீழ்ப்பாக்கம் பா்னபி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அதிகாரி வீடு உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. செங்கல்பட்டு,கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினா் சோதனை செய்தனா்.

ஆவணங்கள் சிக்கின: சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் நவீன ரக துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா். காலை தொடங்கிய சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. தொடா்ந்து, 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் சோதனை நீடிக்கும் என்று தெரிகிறது. இந்த சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,நகை,பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →