ஸ்மார்ட்போனுக்கு 20,000mAh பேட்டரி சாத்தியமா? சாம்சங் சோதனை!
ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரி திறனை அதிகரிக்கும் வகையிலான முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரி திறனை அதிகரிக்கும் வகையிலான முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு 12,000mAh முதல் 20,000mAh வரை திறனை அதிகரிக்கும் வகையில், சிலிகான் - கார்பன் பேட்டரி பரிசோதனையில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தற்போது ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 7500mAh வரையிலான திறனுடைய பேட்டரிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்துக்கு இணையாக கேமராவில் கவனம் செலுத்திவரும் சாம்சங் நிறுவனம், தற்போது பேட்டரி திறனை அதிகரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
ஸ்மார்ட்போன்களில் பேட்டரி திறனை அதிகரிக்கும் சோதனை முயற்சியில் 12,000mAh , 18,000mAh, 20,000mAh என மூன்று வகையான மாதிரிகளை சாம்சங் உருவாக்கி சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மாதிரிகளின் (புரோட்டோடைப்) பேட்டரி திறன் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவை எட்டவில்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த மாதிரிகள் பெரும்பாலும் 960 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும்போது, நிர்ணயிக்கப்பட்ட கால அளவை எட்டுவதில் தோல்வி அடைகின்றன. குறிப்பாக 20,000mAh பேட்டரியில் அதிகம் நடக்கிறது.
இதனால், 12,000mAh மற்றும் 18,000mAh பேட்டரிகளின் நம்பகத்தன்மை மற்றும் பயன்படுத்தும்போதும் சார்ஜ் செய்யும்போதும் அதிக வெப்பம் வெளியாவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்ப செயல் திறனைக் கட்டுப்படுத்தும் சோதனைகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளது.
12,000mAh பேட்டரி திறனுடைய சோதனை மாதிரியானது, 4.7 மி.மீ. தடிமனுடைய 6,800mAh பேட்டரியையும் 3.2 மி.மீ தடிமனுடைய பேட்டரியையும் ஒருங்கே கொண்ட அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட வடிவமைப்பு மட்டுமே.
18,000mAh பேட்டரி திறனுடைய சோதனை மாதிரியானது, மூன்று பேட்டரிகளின் ஒருங்கிணைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,699mAh, 6,000mAh மற்றும் 5,257mAh என மூன்று பேட்டரிகளை ஒருங்கிணைத்து 18,000mAh திறனை எட்ட சாம்சங் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த மூன்றும் சேர்ந்து 12.3 மி.மீ தடிமன் இருக்கும்.
சாம்சங் நிறுவனத்தின் இந்த முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தால், அதிக பேட்டரி திறனுடைய ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் சாம்சங் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.