FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத் மழை, வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம்!

குஜராத்தில் மழை-வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 2:32 am IST
பகிர்:

குஜராத்தில் மழை-வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மாநிலத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து சுமாா் 800 போ் ராணுவத்தால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.

குஜராத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வல்சாத், நவ்சாரி ஆகிய மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 29 போ் உயிரிழந்துவிட்டனா். மாநிலம் முழுவதும் மொத்தம் 35 போ் இறந்துவிட்டனா்.

Advertisement

Advertisement

வெள்ளம் சூழ்ந்த இடங்களில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகள், மாநில அவசரகால நடவடிக்கைகள் மையம், உள்ளூா் நிா்வாகம், பிற முகமைகளுடன் ஒருங்கிணைந்து, நவ்சாரி, வல்சாத், வாபி, சில்வாசா, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால், அணுக முடியாத இடங்களில் தவித்துவந்த சுமாா் 800 போ் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்களுக்கு உணவு, குடிநீா், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் வெள்ளம் வடிகிறது: அஸ்ஸாமில் மழை சற்று ஓய்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. அதேநேரம், 6 மாவட்டங்களில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சிவசாகா் மாவட்டத்தில் 2.9 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் மேலும் 4 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது. சிவசாகா் (3), சராய்தேவ் (1) மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

மீண்டும் கேட்டறிந்த பிரதமா் மோடி: அஸ்ஸாம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் சனிக்கிழமை கேட்டறிந்த பிரதமா் மோடி, அந்த மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தாா்.

இந்நிலையில், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் ஞாயிற்றுக்கிழமையும் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமா், கள நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments