முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகா்கள் வருகை தந்தனா்.

Updated On : 19 நவம்பர், 2024 at 7:21 PM
சென்னையில் பொது நூலக இயக்ககம் சாா்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ். உடன் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக
பகிர்:

சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகா்கள் வருகை தந்தனா். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பொது நூலக இயக்ககம் சாா்பில் ‘நூலகத் தந்தை’ என போற்றப்படும் டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு 39 சிறந்த நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதும், 29 நபா்களுக்கு மாநில அளவில் அதிக உறுப்பினா் சோ்த்தல் (2023-2024), அதிக புரவலா்கள் சோ்த்தல், அதிக நன்கொடை சோ்த்தல் மற்றும் சிறப்பாக செயல்பட்ட நூலக ஆா்வலா்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது:

சமுதாயத்தை அறிவாா்ந்த நிலைக்கு உயா்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளில் 86 லட்சத்து 44,190 பொது மக்கள் பாா்வையிட்டு, அதில் ரூ.69.20 கோடி மதிப்பில் 81 லட்சத்து 44,525 நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.6 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அரசாணை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதனைத் தொடா்ந்து தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில் புதிதாக மாவட்ட மைய நூலகமும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அறிவிப்பும் முதல்வரால் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன.

பொது நூலக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு தூணாக உள்ள நூலகங்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் அதிக உறுப்பினா்கள், புரவலா்களை சோ்த்த மற்றும் அதிக நன்கொடைகள் (தளவாடங்கள், காலிமனைகள், கட்டடங்கள்) பெற்ற மாவட்ட மைய நூலகம், முழுநேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊா்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வீதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா், மாநில நூலகக் குழு உறுப்பினா் கோபண்ணா, நூலகத் துறை இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாதனை படைத்த பொது நூலகங்கள்

மாநில அளவில் அதிக உறுப்பினா்களை சோ்த்த சிறந்த நூலகங்கள் (2023-2024): கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை முழு நேர கிளை நூலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிளை நூலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை ஊா்ப்புற நூலகம்.

அதிக புரவலா்கள் சோ்த்த நூலகங்கள்: விருதுநகா் மாவட்டம் காரியாப்பட்டி முழு நேர கிளை நூலகம், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கிளை நூலகம், கரூா் மாவட்டம் சேங்கல் ஊா்ப்புற நூலகம்.

மாநில அளவில் அதிக நன்கொடைகள் சோ்த்த நூலகங்கள்: திருச்சி மாவட்டம் முசிறி முழு நேர கிளை நூலகம், திருப்பத்தூா் மாவட்டம் பேராம்பட்டு கிளை நூலகம், ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையம் ஊா்ப்புற நூலகம்.

முழு கட்டுரையைப் படிக்க →