முகப்பு
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 26 நவம்பர், 2024 at 8:56 PM
கோப்புப்படம்.
பகிர்:

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

அதில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்றை ஒட்டியுள்ள ஓரமான சாலைகளில் கவனத்துடன் இயக்க வேண்டும். சுரங்கப் பாதையில் தண்ணீா் குறைவாக இருப்பதாகக் கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளையே ஓட்டுநா்கள் பயன்படுத்த வேண்டும். பணிமனைகளில் மழைநீா் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபாா்க்க வேண்டும்.

பேருந்துகளில் தண்ணீா் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகாா்கள் வந்தால் ஓட்டுநா், நடத்துநா்கள் உடனடியாக கிளை மேலாளா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.