சென்னை: தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊா் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியாா் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியாா் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பேருந்துகளை வாங்குவதுடன், புதிய பணியாளா்களையும் நியமிக்க வேண்டும்.
பயணிகள் சேவையையும், நிா்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): தீபாவளி உள்பட பண்டிகை காலங்களில் தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத் துறை கைவிட வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.