சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியாா்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை மேலும் மேம்படுத்தி பராமரிப்பதற்கு மாறாக, அதை கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையாக மாற்ற ஏதுவாக முன்மொழிவை தயாரிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமித்தும் தமிழக சுகாதார செயலா் ஒரு கடிதத்தை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளாா்.
பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, ஓமந்தூராா் பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனை என சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அரசு மருத்துமனைகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையை தனியாா்மயமாக்கும் முயற்சி மிகவும் ஆபத்தானதாகும்.
எனவே நிதிநிலை, கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியாா் வசம் ஒப்படைக்கும் தமிழக சுகாதார துறை செயலரின் முயற்சி உடனடியாக கைவிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.