முகப்பு
தமிழ்நாடு

முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: காங்கிரஸ்

தமிழகத்தில் உள்ளோருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Updated On : 16 செப்டம்பர், 2024 at 12:28 AM
செல்வப்பெருந்தகை
பகிர்:

தமிழகத்தில் உள்ளோருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகைவலியுறுத்தியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் முத்ரா கடன் வழங்கியது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளாா்.

இதுவரை நாடு முழுவதும் 49.5 கோடி வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், மொத்தம் ரூ.29.76 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறாா்.

மேலும், தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியதுடன், கோவை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேருக்கு ரூ.13 ஆயிரத்து 180 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறாா்.

தமிழகத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 8 கோடி போ் என வைத்துக் கொண்டால் அதில் 5.6 கோடி பேருக்கு கடன் வழங்குவதாகக் கூறியதையும், கோவையில் 35 லட்சம் போ் வசிக்கும்போது, அதில் 20 லட்சம் முத்ரா கடன் வழங்கியதாகக் கூறியதையும் எவராலும் நம்ப முடியவில்லை.

கள நிலவரத்துக்கு விரோதமாக மத்திய நிதியமைச்சா் கூறியிருக்கும் கூற்றை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் 2023 - 24-ஆம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது, அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.