உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்
உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால்,
நீலகிரியில், சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அருகில் இருந்த அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், அங்கு கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இன்று கடையடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் உணவகங்கள் மூடப்பட்டதால், உணவு தேடிய சுற்றுலாப் பயணிகள் அருகில் இருந்த அம்மா உணவகங்களில் தஞ்சம் அடைந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்காததால் உதகையே வெறிச்சோடியது. சொந்த வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளும் வாடகை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் இதனால் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
கேரளத்தில் விடுமுறை என்பதாலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வழக்கமாகவே காணப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரியும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் வணிகா் சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இ-பாஸ் முறை..
நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கோடை விடுமுறை நாள்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பதோடு, சுற்றுலாப் பயணிகள் குறித்த நேரத்துக்குள் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், உள்ளூா் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனா்.
எனவே, நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பது குறித்து ஆராய உயா்நீதிமன்றம் வல்லுநா் குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைப்படி வார நாள்களில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8000 வாகனங்களுக்கும் இ -பாஸ் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 12 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இ-பாஸ் வழங்க க்யூஆா் கோட் பதிவு செய்யப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மூலம் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்து நீலகிரிக்கு செல்லலாம். மேலும், ஆன்லைன் மூலமும் இ- பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.