நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்சணைப் புகார்
நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு கணவர் துன்புறுத்தியதாக உரிமையாளர் மகள் வரதட்சணைப் புகார் அளித்துள்ளார்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங் திருநெல்வேலி காவல்நிலையத்தில் இன்று நேரில் வந்து புகார் அளித்தார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
40 நாள்களுக்கு முன்புதான் நெல்லையில் மிகப் பிரம்மாண்டமாக ஸ்ரீ கனிஷ்காவுக்கும் நெல்லையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விடியோ ஒன்றை இருட்டுக்கடை அல்வா கடையின் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள், ஸ்ரீகனிஷ்கா காவல்நிலையத்தில் தனது கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணைப் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில், இருட்டுக் கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கு கனிஷ்காவுடன் திருமணமான நிலையில், ஒரு சில நாள்களிலேயே அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவரும், அவரது தந்தையும் தங்களது காரில் கனிஷ்காவை அழைத்து வந்து அவரது தாய் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, இருட்டுக்கடையின் உரிமை மற்றும் கூடுதல் சொத்துகளை எழுதி வாங்கி வரும்படி அனுப்பி வைத்ததாகவும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.