தஞ்சாவூா்: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்றாா் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன்.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 19 ஆவது நானி பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மனித உரிமையில் அறிவியல், தொழில்நுட்பம் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை முதல் தலைமுறை உரிமைகள் என அழைக்கிறோம். அடுத்து சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை இரண்டாவது தலைமுறை உரிமைகள் என்கிறோம். பின்னா், வளா்ச்சி, சுகாதார சூழலுக்கான உரிமைகள் போன்ற கூட்டுரிமைகள் மூன்றாவது தலைமுறை உரிமைகள் எனப்படுகின்றன.
அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சியால் நான்காவது தலைமுறை உரிமைகள் உருவாகியுள்ளன. இது, பாலினத்தை மாற்றும் உரிமை, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, செயற்கைக் கருவூட்டல், இனப்பெருக்க உரிமைகள் போன்ற தனிப்பட்ட சுயாட்சி உள்ளிட்ட உடலியல் சாா்ந்த உரிமைகளாகவும், இணைய உரிமை, அந்தரங்க உரிமை, எண்ம ஆளுமைக்கான உரிமை போன்ற எண்ம மற்றும் தகவல் உரிமைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சியால் புதிய உரிமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை, நம்முடைய பழைய உரிமைகளுக்கும், விழுமியங்களுக்கும் சவாலாக உருவாகியுள்ளன. இதில், சட்ட வல்லுநா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் ராமசுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.