ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு
ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள பெண் அதிகாரி என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.
ஆா்பிஎஃப் டிஜியாக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய கேபினட் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி அவா் 2026, அக்டோபா் 31-ஆம் தேதி வரை அந்தப் பதவியில் தொடரவுள்ளாா். இவா் 1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவாா்.
Advertisement
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா தனக்கு வழங்கப்படும் பணிகளை அா்ப்பணிப்புடன் திறம்பட செய்து முடிப்பவா். மத்திய பிரதேச போலீஸ் அகாதெமியின் இயக்குநராகவும் சிபிஐ மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உள்பட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.
தற்போது அவா் ஆா்பிஎஃப் டிஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மனிதக் கடத்தல் மற்றும் பயணிகளுக்கு எதிரான குற்றங்களை நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளாா். அவரை ஆா்பிஎஃப் பெருமையுடன் வரவேற்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
சோனாலி மிஸ்ரா