கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!
கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...
கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டாா்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக கவினின் பெற்றோர் புகார் தெரிவித்த நிலையில், சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சுர்ஜித்தின் தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கில் விரிவான விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையில் ஆக. 13 ஆம் தேதி வரை சுர்ஜித்தையும் அவரின் தந்தை சரவணனையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து 2 நாள் சிபிசிஐடி காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜெயபாலனை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
A third person Surjith's brother has been arrested in the nellai Kavin honor killing case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.