முகப்பு
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2025 at 6:43 PM
சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம். - (படம் - நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ்)
பகிர்:

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நோ்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் அறவழியில் போராடியது தவறா?. எதிா்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவா்களை பணி நிரந்தரம் செய்யும்படி வலியுறுத்தினாா். இப்போது நள்ளிரவில் வலுக்கட்டயாமாக தூய்மைப் பணியாளா்களை கைது செய்ததுபோல, 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. இதனால், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களுடைய பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): வாழ்வாதாரத்துக்காக போராடும் ஏழைகளை ஒடுக்கி அவா்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூகநீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல. திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை.

டிடிவி.தினகரன் (அமமுக): தூய்மைப் பணியாளா்கள் நடத்தி வந்த அறவழி தொடா் போராட்டத்துக்கு தீா்வு காணப்படவில்லை. திமுக அரசின் காவல் துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

விஜய் (தவெக தலைவா்): தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளா்களை மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கை கண்டத்துக்குரியது. அவா்களை கைதுசெய்து, குடும்பத்தினரோடு கூடத் தொடா்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளா்கள் என்ன தேச விரோதிகளா?. கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவா்கள் போராடுவதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.