குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.
இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவித்தபோது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளைத் தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவுக்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.