10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்! முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு!
தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் மயக்கமடைந்தது பற்றி..
தவெக மாநாட்டுத் திடலில் கூட்ட நெரிசல் மற்றும் வெய்யில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை மாநாட்டுத் திடலில் நேற்று நள்ளிரவு முதலே தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கடும் வெய்யில் காரணமாக தரை விரிப்புகளை கிழித்து எடுத்து தற்காலிக கூடாரம் அமைத்து ரசிகர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர். சிலர் இருக்கைகளை நிழற்குடை போல் மாற்றி தலையில் பிடித்துக் கொண்டனர்.
கடும் வெய்யில் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். இதனால் மாநாட்டு திடல் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்து வருகின்றனர். மாநாடு பந்தல் முழுவதும் இதன் காரணமாக ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்த நிலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மற்ற பகுதிகளுக்கு அவர்கள் செல்கின்றனர். தனியார் பவுன்சர்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் கடும் அவதி அடைகின்றனர்.
மேலும் தடுப்புகளில் இருந்து மாறிச் செல்லாமல் இருக்க தடுப்புகள் அனைத்தும் கிரீஸ் தடவப்பட்டது. அதற்கு தொண்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனால் தனியார் பாதுகாவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநாட்டில் ஏற்கனவே குழந்தைகளுடன் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் பலர் குழந்தைகளுடன் வந்துள்ளனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் மாநாட்டு வாசல் பகுதியிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டதற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.