சென்னையில் போக்குவரத்து எஸ்எஸ்ஐ தற்கொலை!
சென்னையில் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டது பற்றி...
சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை எச்3 தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கு திருமணமாகி தெரேசா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை தனது வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு சிவக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், சிவக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு சிவக்குமார் தனது மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், இன்று காலை குடும்பத்தினர் வெளியே சென்ற சமயத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மீண்டும் குடும்பத்தினர் வீடு திரும்பிய நிலையில், உள்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்த போது, தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்த சிவக்குமாரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.