தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் பார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.
இந்தக் கல்குவாரியில் கல் உடைத்து எடுப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் (40). தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நகரச் செயலராக இருந்து வந்தார்.
இவர், தங்களுக்கு கல் உடைப்பதற்கு உரிமை உண்டு, அதனால் தாங்களும் கல் உடைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், கேரளத்திற்கு கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி அரசியல் கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலமாக சதீஷ் குமாருக்கும் எதிர் தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதன்படி, இருதரப்பினருக்கும் இடையே நேற்றிரவு அங்குள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது அங்கிருந்த காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் குமாரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராயப்பன்பட்டி காவல் துறையினர், காயமடைந்த சதீஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலே சதீஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் கொலை சம்பவத்திற்கு காரணமான 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும், கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக இரவு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கல்குவாரி விவகாரத்தின் பேச்சு வார்த்தையின் போது பார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.