FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்! மேல்முறையீடு செய்ய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை வைத்துள்ளது.

Updated On : 2 டிசம்பர் 2025, 5:37 pm IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம்
பகிர்:

புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை மீது இதுவரை நடைமுறையில் இல்லாத ஓர் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய அக்கட்சியின் இரு நாள் மாநிலக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள், மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மதுரை திருப்பரங்குன்றத்தில் இதுவரை நடைமுறையில் இல்லாத இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை மாலை தீர்ப்பளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் உரிமை தொடர்பாக ஏற்கெனவே வந்துள்ள உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கெல்லாம் எதிரானதாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது.

காலம் காலமாக இரு மதங்களைச் சேர்ந்த மக்களும் நல்லிணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இத்தீர்ப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு இந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது. உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மதுரையில் மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அனைத்துக் கட்சியினரும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இதனையே வலியுத்தியுள்ளனர் என்றார் பெ. சண்முகம்.

மாநிலக் குழுக் கூட்டத்துக்கு, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமை வகித்தார். அகில இந்தியப் பொதுச் செயலர் ஏ.எம். பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டச் செயலர் எஸ். சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments