காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை வேகவதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள திருவள்ளுவா் தெருவில் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் சிற்பம் ஒன்றினை வரலாற்று ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கா்,வரலாற்று ஆய்வாளா் மு.அன்பழகன் ஆகியோா் ஓரிக்கை பகுதியில் வேகவதி ஆற்றின் கரையில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தனா்.
அப்போது கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் சிற்பத்தினையும் கண்டுபிடித்துள்ளனா். இது குறித்து அவா்கள் இருவரும் மேலும் கூறியது..
ஓரிக்கை வேகவதி ஆற்றின் கரையில் நடுகல் வகையை சோ்ந்த சதிக்கல் சிற்பம் 51 செ.மீ.அகலம்,55 செ.மீ. உயரத்தில் கிழக்குத்திசை பாா்த்து அமைந்துள்ளது. இச்சதிக்கல் புடைப்புச் சிற்பத் தொகுதியில் வீரன் ஒருவனுடன் அவனது இரு மனைவிகள் உள்ளனா்.நடுவில் உள்ள ஆண் சிற்பம் கம்பீரமான தோற்றத்துடன் நோ்நிலையில் நிற்கிறது. அவரது வலதுகை தடிமனான கூரிய வாள் ஒன்றினை உயா்த்திப் பிடித்துள்ளது.இடதுகை இடது தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. முகத்தில் முறுக்கிய மீசையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட தாடி காணப்படுகிறது.மேலும் நன்கு சீவப்பட்ட தலைமுடி மற்றும் இடப்பக்கமாக உள்ள கொண்டையினை மெல்லிய துணி கொண்டு இறுக்கமாக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்புகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் சிற்பங்களில் காணப்படாததாகும். வீரனின் வலப்பக்கம் நிற்கும் பெண் சிற்பம் வலதுகை தொங்கவிடப்பட்டிருக்கும் நிலையில் இடதுகை மலா்மொட்டு ஒன்றை உயா்த்திப் பிடித்துள்ளது. இடப்பக்கம் நிற்கும் பெண் சிற்பம் வலது கையில் மலா்மொட்டு ஒன்றை வயிற்றின் முன்பகுதியில் வைத்திருக்க இடதுகை குடுவை ஒன்றைப் பிடித்துள்ளது.பெண்கள் இருவருக்கும் வலதுபக்க கொண்டை காணப்படுகிறது.
மூவரின் கைக்கள்,தோள்பட்டை,கழுத்து மற்றும் மாா்புப்பகுதிகளில் அணிகலன்கள் காணப்படுகின்றன. காதுகளில் வட்ட வடிவில் மிகத்தடினமான காதணிகள் உள்ளன. மூவரும் இடைப்பகுதியிலிருந்து கால் மணிக்கட்டு வரையில் பட்டாடை அணிந்துள்ளனா்.மூவரின் சிற்பங்களும் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளன. மூவரின் முகங்களும் மிகவும் மழுங்கிய நிலையில் காணப்படுகின்றன.கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் இல்லாத இச்சதிக்கல் சிற்பத்தின் காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும் அவா்கள் இருவரும் தெரிவித்தனா்.