தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு பற்றி தெரியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை நேற்று(டிச. 5) நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளிக்கையில், "விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு பற்றி எனக்குத் தெரியாது,
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி பலமாக உள்ளது, எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் செய்கிறோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்று சந்தித்தற்கு ஏதேனும் புகைப்படங்கள் இருக்கிறதா? அப்படி அவர் சந்தித்திருந்தால் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும்" என்றார்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.