தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்!
தவெகவில் நாஞ்சில் சம்பத்துக்கான பொறுப்பு பற்றி விஜய் அறிவிப்பு...
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
எழுத்தாளரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில், நேற்று (டிச. 5) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்.
கடந்த சில வாரங்களாகவே, தவெக தலைவர் விஜய்-க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு பதவியை அறிவித்துள்ளார் கட்சியின் தலைவர் விஜய்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் நாஞ்சில் சம்பத், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணன் நாஞ்சில் சம்பத், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர் பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.
கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.