சென்னை, வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகும்! எப்படி இருக்கப்போகிறது?
சென்னை உள்பட வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகவுள்ளது தொடர்பாக....
வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் காரணமாக சிறிய குளிர் அலைகள் உருவாகவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை குறித்த தகவல்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீன் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”வரும் டிச. 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் ஏற்படும். இதனால் மத்திய இந்தியா முழுவதும் சிறிய குளிர் அலைகள் போன்ற சூழலை உருவாக்கும். இதன் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வடதமிழகத்திலும் உணரப்படும்.
பெங்களூரு மற்றும் ஓசூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்படும். இந்தச் சமயத்தில் உதகை, கொடைக்கானலில், 5 டிகிரி செல்சியஸுக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும்.
டிசம்பர் மாத வானிலையானது, மேற்கு கடற்கரை நகரப்பகுதியில், இயல்புக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி