ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்: அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க ரூ. 70.22 கோடியை அரசு ஒதுக்கீடு செயயப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழநி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கோவி.செழியன்,
தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய் பாண்டிச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது கூரையேறி கோழி பிடிக்காதவர் - வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பதுபோல.
அவர் தேர்தலில் நிற்கட்டும், முதலில் சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு பாண்டிச்சேரி போகட்டும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய்" எனத் தெரிவித்தார்.