தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் இன்று(டிச. 23) சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் அறிவிக்கப்படவிருக்கிறது. இதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்க கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியமித்து பாஜக அறிவித்தது. இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை தந்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சென்னையில் பாஜக நிர்வாகிகளின் மையக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. கூட்டணியில் இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் விலகியுள்ள நிலையில் அவர்களை மீண்டும் சேர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாமகவில் ராமதாஸ், அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தேமுதிகவும் வருகிற ஜனவரியில்தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவும் சூழ்நிலையில்தான் பியூஷ் கோயல் தற்போது சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.