ஒகேனக்கலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் தனியார் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு ஈமச்சடங்கிற்காக வந்த சுற்றுலா வாகனம் கணவாய் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மொண்டு குழி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அண்மையில் இறந்துள்ளார். அவரின், ஈமச்சடங்கிற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட நபர்களுடன் அரூர் பகுதியில் உள்ள 2 தனியார் சுற்றுலா வாகனத்தில் ஒகேனக்கல் பகுதிக்கு வியாழக்கிழமை வாடகைக்கு வந்துள்ளனர்.
அப்போது ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயிலின் மேல் இரண்டாவது வளைவில் முன்னாள் சென்ற தனியார் சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சிறிய தடுப்பின் மீது ஏறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்த வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கணவாய் சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து ஒகேனக்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.