மெட்ரோ சேவை பாதிப்பு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கோயம்பேடு வழித்தடத்தில் இயக்கப்படும் நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு வழித்தடத்தில் வரும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, நீல வழித்தடத்துக்கு மாறி விமான நிலையம் நோக்கி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் நேரடி சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் வருபவர்கள் ஆலந்தூர் நிலையத்தில் இறங்கி, நீல வழித்தடத்தில் வரும் மெட்ரோ ரயிலில் விமான நிலையம் நோக்கி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மற்றொரு பச்சை வழித்தடமான சென்ட்ரல் - பரங்கிமலை ரயில்களும், நீல வழித்தடத்தின் அனைத்து ரயில்களும் வழக்கமான வார நாள்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவிப்பு வரும்வரை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் - விமான நிலைய மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கோளாறை சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், பயணிகளின் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.