முகப்பு
தமிழ்நாடு

நிறுத்திவைத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி!

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.

Updated On : 10 பிப்ரவரி 2025, 12:55 pm IST
பகிர்:

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது ஏன் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது, தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு ஆகிய விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த வாரம் மூன்று நாள்கள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும்(பிப். 10) வழக்கின் விசாரணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இன்று தமிழக அரசு தரப்பிலும் ஆளுநர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகளும் ஆளுநர் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

"ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவிக்காமல் மறுஆய்வு செய்ய திருப்பி அனுப்புவது எப்படி? மசோதாவில் உள்ள முரண்பாடை ஆளுநர் அரசிடம் வெளிப்படையாக காட்டி இருக்கலாமே?" என நீதிபதிகள் கூற,

ஆளுநர் தரப்பு, "நிறைவேற்றப்பட்ட மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை, முரண்படுகிறது என ஆளுநர் கருதினால் என்ன செய்வது? அதனால்தான் முடிவெடுக்கவில்லை" என்று கூறியது.

தொடர்ந்து வாதத்தின் இடையே நீதிபதிகள்,

"ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை இல்லை. ஆளுநரின் அதிகாரம் என்னவென்பதை அரசியல் சாசனத்தில் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மசோதாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்திவைத்த பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது எப்படி முடியும்?

ஆளுநர் நிறுத்திவைத்த மசோதா செல்லாது என்றால் செல்லாத மசோதாவை ஏன் குடியரசுத்தலைவருக்கு அனுப்புகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில், "ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநரால் செயல்பட முடியும்" என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.