விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
நடிகர் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்வார் என்பதால் அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விஜய்யின் பாதுகாப்பு பணிக்காக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இந்த பாதுகாப்பானது தமிழகத்தில் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் தலாய் லாமாவுக்கான பாதுகாப்பை இசட் பிரிவாக உயர்த்தி, மத்திய ரிசர்வ் காவல் படையின் 30 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.