முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு: இபிஎஸூக்கு எதிரான கருத்துகள் நீக்கம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை நீக்கிவிட்டதாக பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:48 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2025 at 12:21 AM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை நீக்கிவிட்டதாக பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ஆம் ஆண்டு புகுந்த கும்பல் ஒன்று காவலாளியை கொலை செய்துவிட்டு பல்வேறு முக்கியப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு குறித்து பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொடா்பு இருப்பதாக 2019-ஆம் ஆண்டு விடியோ வெளியிட்டாா்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தொடா்பு இருப்பதாக தகவல் அளித்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை சிறப்புப் படை கைது செய்தது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல் தன்னைப்பற்றி கருத்து தெரிவிக்க தடை விதிக்கக் கோரியும், தனக்கு மானநஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி 2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

Advertisement

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்குவது தொடா்பாக மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்கிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, பதில் மனுவில், வேறு ஏதேனும் கருத்துகளை நீக்க வேண்டுமா? என்பது தொடா்பாக தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.