திருச்சி மாநகராட்சியுடன் நெடுஞ்சலக்குடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்
லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்
லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாநகராட்சி உடன் மாநகராட்சிகள் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை இணைத்துள்ள நிலையில் லால்குடி அருகே அப்பாதுரை தாளக்குடி, வாளாடி ,நெருஞ்சலக்குடி ஆகிய ஊராட்சிகளையும் திருச்சியில் மாநகராட்சியுடன் இணைத்துள்ளனர்.
இதனை அறிந்த நெடுஞ்சலக்குடி ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் நெடுஞ்செழக்குடி ஊராட்சியை இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். புதிதாக வீடு அமைப்பதற்கான கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயரும்.
Advertisement
இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி-சிதம்பரம் சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று கூறி கருப்பு கொடியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது வட்டாட்சியர் வார்டு இணைப்பு என்பது தற்காலிக உத்தேசம் தான். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலனை செய்து மாற்று நடவடிக்கை எடுக்கும். எனவே உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள், ஆட்சியருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.
இதையேற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனா். இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.