ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைத்தார்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஏற்கெனவே பெற்றிருந்த மக்கள் நியாய விலைக் கடைகளுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர்.
ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.