அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறித்து அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஊழல் தடுப்புப்பிரிவினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை நடத்தி,பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.