தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பில், அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நகராட்சி நிர்வாகத் துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அமலாக்கத் துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை எனவும், அமலாக்கத் துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.