சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னையை அடுத்த புழல் பிரிட்டானியா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், ஒரு பிரபலமான பால் தயாரிப்பு நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தாா். நவீன் அந்த நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்துவிட்டதாக புகாா் கூறப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நவீன் தூக்கிட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரது மரணத்தில் கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது. அவரிடம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நவீன் கொலை குறித்து செய்தியாளர்கள் கொலையா? தற்கொலையா? என்று கேட்டதற்கு, இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றுதான் உள்ளது. அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிகிறது என கூறினார். அதாவது, சிலர், தூக்கிட்டுக்கொல்லும்போது சிலர் காப்பாற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அது பல இடங்களில் நிகழ்ந்துள்ளது என்று அருண் கூறினார்.
மேலும், மேலாளர் நவீனை மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், அலுவலகம் அழைத்துவந்து விசாரித்ததாக இதுவரை தகவல் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
நவீன் மரணம் நிகழ்ந்த அன்று, பாண்டியராஜனும் விடுப்பில் சென்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, காவல் துணை ஆணையருக்கு விடுமுறை அளித்தது நான்தான் என்றும் அருண் கூறியிருக்கிறார்.
மேலும், நவீன் அனுப்பிய மின்னஞ்சலில், காவல்துறை மிரட்டியதாக எங்குமே குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நவீன் மீது மோசடிப் புகார்
நவீன் மீது சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த ஜூன் 25-ஆம் தேதியும் புகாா் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாா் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.
இதற்கிடையே, மன உளைச்சலுடன் காணப்பட்ட நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. மரபணு கோளாறு: சோதனை முறையில் மருந்து செலுத்திய சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.