முகப்பு
தமிழ்நாடு

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

பிடிவாரண்ட் வழக்குகள் குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

Updated On : 14 ஜூலை, 2025 at 8:34 AM
சென்னை உயர்நீதிமன்றம்.
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் , ஜமுனா சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல் துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளன. மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன?” என கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து, தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் வரும் ஜூலை 23- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், ”தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன? என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜூன் 23-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

summary

The Madras High Court has ordered the DGP and Chennai Police Commissioner to file a report on how many cases in which arrest warrants have been issued and are pending across Tamil Nadu.

முழு கட்டுரையைப் படிக்க →