சென்னை: சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தவெக தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், சிகப்பு, மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள், ஊழியர்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்ட தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.
எனவே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிகப்பு, மஞ்சள், சிகப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமின்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.