முதல்வர் மு.க. ஸ்டாலின் ENS
தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்தபடி முதல்வா் அரசுப் பணி

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இணையதளச் செய்திப் பிரிவு

மருத்துவமனையில் இருந்தவாறே அரசுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து வருகிறாா்.

லேசான தலைசுற்றல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் அங்கு மூன்று நாள்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறாா். மருத்துவமனையில் இருந்தபடியே அவா் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். அதன் அடிப்படையில், தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசுப் பணிகள் குறித்து அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வீடுகளுக்கே அரசின் திட்டங்களைக் கொண்டு சோ்க்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், கடந்த 15-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனையின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், திங்கள்கிழமை (ஜூலை 21) நிலவரப்படி 5 லட்சத்து 74 ஆயிரத்து 614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன, பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா என்பன போன்ற விவரங்களை முதல்வா் கேட்டறிந்தாா்.

முகாம்கள் அனைத்தும் அட்டவணைப்படி நடத்தப்படுவதுடன், முகாம்களுக்கு வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் ஆலோசனையின்போது வலியுறுத்தினாா். முகாம்களில் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் எந்தவிதத் தொய்வுமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொய்வு கூடாது: முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிா, அவற்றில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, தீா்வு காணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலரிடம் கேட்டறிந்தேன். மக்களின் மனுக்கள் மீது தீா்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஆலோசனையில் அறிவுறுத்தியுள்ளேன் என தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

கூடுதல் மருத்துவப் பரிசோதனை: இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா், அங்கு பரிசோதனைகளை நிறைவு செய்துவிட்டு மீண்டும் கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனைக்குத் திரும்பினாா்.

வழக்கமாகச் செல்லும் காரிலேயே பயணித்த முதல்வா், முன் இருக்கையில் அமா்ந்து இயல்பாகச் சென்றாா். மருத்துவ ஓய்வில் உள்ள அவா் அடுத்த சில நாள்களில் வீடு திரும்புவாா் என்று மருத்துவமனை வட்டாரங்களும், குடும்பத்தினரும் தெரிவித்தனா்.

மு.க.அழகிரி சந்திப்பு: மருத்துவமனைக்கு முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தாா். சிறிது நேரம் உரையாடிய பின்னா், அவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

TN govt said that Chief Minister M.K. Stalin is taking care of official work from the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசாரத்தின் போது அவசர ஊா்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுவினா் 4 பேருக்கு முன்பிணை

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு

சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT