முகப்பு
தமிழ்நாடு

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

Updated On : 3 ஜூன், 2025 at 9:20 PM
உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்.
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

அதில், "தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வு மே 21-ஆம் தேதி மனுவை விசாரித்து அன்றே அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உரிய விசாரணை நடத்தப்படாமலேயே, திருத்தச்சட்டங்கள் அரசமைப்புக்கு எதிரானது என அனுமானித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை இல்லாமல் இயங்கிவந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றம் மே 21-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் திருத்தச் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்திருந்தார். எந்தக் காரணமும் தெரிவிக்காமல் மசோதாவை நீண்டகாலம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.