திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலி!
திருவள்ளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலியானார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அனுமதியின்றி வீட்டின் அருகே தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்குப் போராடிய அவருடைய மகனை பக்கத்து வீட்டு இளைஞர்கள் கயிறு மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்துள்ள முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(61). இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும் சிந்து என்ற மகள், சந்தோஷ் குமார் என்ற மகன் உள்ளனர்.
Advertisement
Advertisement
கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஜோதி தனது வீட்டின் பின்புறமாக அனுமதியின்றி 3 அடி அகலத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்கு 20 நாள்களுக்கு மேலாக மகனும் தந்தையும் சேர்ந்து கிணறு தோண்டி உள்ளனர்.
அந்தக் கிணற்றில் மின் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சி தொட்டியில் சேமித்து வைத்து வீட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிகிழமை மாலையில் தண்ணீர் வராததால் கிணறு பகுதிக்குச் சென்ற சந்தோஷ் குமார் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அதைக் கண்ட அவருடைய தந்தை ஜோதி, மகனைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார்.
அப்போது விஷவாயுத் தாக்கியதில் தந்தை ஜோதி பலியாகி உள்ளார். பின்னர் கிணற்றுக்குள் சந்தோஷ் குமார் அலறல் சப்தம் கேட்டு அவருடைய தாய் புவனேஸ்வரி பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி என்பவர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக சந்தோஷ்குமாரை மயங்கிய நிலையில் மீட்டு அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்கு நேற்று இரவு வந்த மப்பேடு காவல் நிலைய போலீஸார் பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர். பின்னர் கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் இருந்த ஜோதியை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் போலீஸார் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த கிராமத்தில் பல நாள்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் எந்தவித அனுமதியும் இன்றி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் அவர்கள் கிணறு தோண்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.