கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுயது பற்றி..
கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சேர்ந்த நீலாவதி (60) என்பவர் பீளமேடு, தண்ணீர்ப் பந்தல் ரோடு, மகேஷ் நகர்ப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். நீலாவதி தனது வீட்டிற்குச் செல்வதற்காக அவிநாசி சாலை, பீளமேடு வரதராஜா மில் எதிரே உள்ள சாலையைக் கடந்து, வரதராஜா மில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி நீலாவதி தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் கோவை கிழக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நீலாவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், சேலத்திலிருந்து கோவைக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வெறும் LLR மட்டும் வைத்துக்கொண்டு, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மதன்குமார் (23) என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் மதன்குமாரை கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.