மறைந்தார் கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி!
நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.
சிவகங்கை: கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்துக்கு வெட்டுடையார் காளியம்மன் கோயில் இருப்பது சிறப்பு. இதே ஊரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த கருப்பாயி என்பவரும் தனது பாடல்களால் கொல்லங்குடிக்கு பெருமை சேர்த்தார்.
இந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தெ. காத்தமுத்துபிள்ளை என்பவர் வயலில் பாட்டுப்பாடி முதல் நெல் நாற்றை நடவு செய்து இவர்தான் தொடங்கி வைப்பார். இவரது வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது.
பின்னர் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன் கண்ணில் பட்டதால் அவரது ஆண்பாவம் படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களை பாடவும் வைத்தார். தொடர்ந்து அவருடன் ஆயுசு நூறு, கோபாலா கோபாலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
நாட்டுப்புறப்பாடல்களில் முன்னோடியாக கருதப்படும் இவருக்கு கடந்த 1993 -ல் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார். கொல்லங்குடியில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக தனது 99 -ஆவது வயதில் 14.6.2025 (சனிக்கிழமை) காலமானார்.