பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் நேற்று காலை பள்ளி சென்றுகொண்டிருந்த சிறுமி மீது லாரி மோதியதில் அவர் பலியான நிலையில், காவல்துறை ஆணையர் அருண் இன்று அதிரடி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னையில், காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாள்களுக்குள், உரிமையாளர்களிடம் தரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளின்போது, கனரக வாகனங்கள் என எவற்றையும் குறைந்தபட்சம் 100 நாள்களுக்குத் தரக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறியதில், பள்ளிச் சிறுமி பலியான நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பெரம்பூரில் விபத்து
கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) என்ற மகளும் இருந்தனா். யாமினியின் கணவா் செந்தில்நாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். யாமினி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். செளமியா, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். யாமினி, செளமியாவை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வேலைக்கு செல்வது வழக்கமாகும்.
அதன்படி யாமினி தனது மொபெட்டில் செளமியாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை - வால்கின்ஸ் சந்திப்பில் சாலையில் இருந்த பள்ளத்தில் வேகமாகச் சென்றபோது, நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனா். இதில், செளமியா சாலையின் உட்பகுதியில் விழுந்தபோது, பின்னால் வந்த ஒரு தண்ணீா் லாரி செளமியா மீது மோதியது. இதில் செளமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.