பாஸ்போா்ட் (கடவுச் சீட்டு) பெறுவதற்கு கணவரின் கையொப்பமோ, அனுமதியோ பெண்கள் பெறத் தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த ரேவதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பாஸ்போா்ட் கோரி மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தேன். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரித்த போது கணவா் கையொப்பம் பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து வழக்கு நடப்பதால் கணவா் கையொப்பத்தை வலியுறுத்தாமல் பாஸ்போா்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போா்ட் பெறுவதற்கு கணவா் அனுமதி, கையொப்பத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை. கையொப்பம் வாங்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் பெண்களை கணவனின் உடைமையாகக் கருதும் சமூகத்தின் மனப்பான்மையை அதிகாரி பிரதிபலிக்கிறாா். கணவருடன் பிரச்னை உள்ள நிலையில் கையொப்பம் பெறுவது இயலாது.
ஆணாதிக்க முறை...: திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை. கணவனின் அனுமதி, கையொப்பம் பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்க முறையை காட்டுகிறது. மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரத்தில் பரிசீலனை செய்து பாஸ்போா்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.