அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பற்றிய பயமல்ல, அதனால் வளர்ச்சி, சமத்துவம் ஏற்படுகிறதே என பயம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் தில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலம் பேசுவதால் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும், ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அமித் ஷாவின் கருத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆங்கிலம் இனி காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் ஆங்கில மொழியை காலனித்துவ விளைவாகக் கருதாமல் அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகத்தில் முன்னிலை பெற அதைக் கற்பிக்கின்றன. சீனாகூட நாட்டின் வளர்ச்சிக்கு ஆங்கில மொழியை அவசியமானதாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியாவில் அமித் ஷாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆங்கிலத்தை உயர்குடியினருக்கானதுஎன சித்தரிக்க விரும்புகிறார்கள். அது நமது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல. அது ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால் ஏற்க மறுக்கிறார்கள். ஒரு காலத்தில் சம்ஸ்கிருதத்தைப்போலவே இப்போது அவர்கள் ஆங்கில மொழி, மக்களை சென்றடையாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களின் கருத்து, மொழி பற்றியது அல்ல, கட்டுப்பாட்டைப் பற்றியது.
திமுகவில், அடையாளத்திற்காக தமிழ், வாய்ப்பிற்காக ஆங்கிலம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி, ஏணியாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக் கூடாது.
அமித் ஷாவுக்கு பயம் ஆங்கிலத்தால் அல்ல, சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றிய பயம் அது" என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.