முகப்பு
தமிழ்நாடு

தட்கல் டிக்கெட் - ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கான ஆதார் எண் இணைப்புப் பணி தொடங்கியிருக்கிறது.

Updated On : 23 ஜூன், 2025 at 10:11 AM
தட்கல் - ஆதார் இணைப்பு - File photo
பகிர்:

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கிறது.

அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியிருக்கிறது.

ஜுலை 1 முதல் ஆதார் ஓடிபி அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

Advertisement

இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

ஆதார் கட்டாயம் - புதிய விதிமுறை!

விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஒரு விரைவு ரயிலில் பயணம் செய்ய, அந்த விரைவு ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் தட்கல் முன்பதிவு தொடங்குகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுதால், அதனைத் தடுக்கும் வகையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிலக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி முதலாவதாக ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால், ரயில் பயனர்கள், தங்களது ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பும் இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் ஜூலை 15 முதல் ரயில்வே கவுன்டர்களில் நேரடியாகச் சென்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் பயணிகள், ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு (Aadhaar-based OTP authentication) மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு, ரயிலில் பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்ட பின்னரே கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.